• Home
  • Science
  • Research & Discoveries
  • 30 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் டைனோசர் படிமம் ஏலத்திற்கு

30 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் டைனோசர் படிமம் ஏலத்திற்கு

ALN NEWS DESK
ALN NEWS DESK
Updated : Jul 13, 2026, 10:20 AM IST
5 min read
  • linkedin
  • twitter
  • facebook
  • instagram
  • whatsapp

67 மில்லியன் ஆண்டுகள் பழமையான 'டைரனோசொரஸ் ரெக்ஸ்' ஒன்று, 30 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நியூயார்க்கில் விற்பனைக்கு வரவுள்ளது.

1997ஆம் ஆண்டில், சோதெபிஸ் ஏல நிறுவனம் நமது வரலாற்றுக்கு முந்தைய உலகின் அதிசயங்களை விற்பனை செய்வதற்கான ஓர் இயற்கை வரலாற்று ஏலத்தை நடத்தியது. இதில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டைனோசரும் சேர்க்கப்பட்டிருந்தது.

இது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கான நிகழ்வாக இருந்தது; தங்கள் சேகரிப்புகளில் சேர்ப்பதற்காக மாதிரிகளைத் தேடும் உலகின் அருங்காட்சியகங்கள் இதில் பெரும்பாலும் கலந்துகொண்டன.

அங்கு ஏலத்திற்கு வந்த டைனோசர் 'சூ' என்று அழைக்கப்படும் ஒரு டைரனோசொரஸ் ரெக்ஸ் ஆகும்; இது இறுதியில் சிகாகோவில் உள்ள ஃபீல்ட் அருங்காட்சியகத்திற்கு 8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் செவ்வாய்க்கிழமை வருடாந்திர ஏலத்தில் மற்றொரு டி. ரெக்ஸ் காட்சிப்படுத்தப்பட உள்ளது; இதுவரை கண்டறியப்பட்டவற்றில் மிகவும் முழுமையான வடிவத்தைக் கொண்ட மாதிரிகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்த முறை டைனோசர்களைத் தேடுவது விஞ்ஞானிகள் மட்டுமல்ல, உலகின் பெரும் பணக்காரர்களும் தான்.

'கஸ்' என்று அழைக்கப்படும் இந்த புதிய மாதிரியின் விலை 30 மில்லியன் டாலர் என ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இது அதைவிட அதிக விலைக்கு விற்கப்படலாம், ஒருவேளை இதுவரை விற்கப்பட்டதிலேயே மிகவும் விலையுயர்ந்த டைனோசராகவும் இது மாறக்கூடும்.

இது இயற்கை வரலாற்று உலகில் விவாதங்களைத் தூண்டியுள்ளது. அதில் முக்கியமானது, இத்தகைய அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த மாதிரிகள் அருங்காட்சியகங்களுக்கும் அவற்றின் விஞ்ஞானிகளுக்கும் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டுமா? என்பதுதான்.

அல்லது, ஏலதாரர்கள் வாதிடுவது போல அறிவியலால் கைவிடப்பட்ட டைனோசர்களைக் கண்டறிந்து, அவற்றை இரண்டாவது அழிவிலிருந்து காப்பாற்றியதற்காக புதைபடிவ வேட்டைக்காரர்களுக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட வேண்டுமா?

சோதெபிஸ் ஏல நிறுவனத்தின் இயற்கை வரலாற்றுக்கான உலகளாவிய தலைவர் காசாண்ட்ரா ஹட்டன், இந்த உயிரினங்களைத் தேடி சில புதைபடிவ விஞ்ஞானிகள் (தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்) எவ்வளவு தூரம் செல்லத் துணிகிறார்கள் என்பதை நன்கு அறிவார்.

"அகழாய்வின் போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உயிரிழக்கிறார்கள்" என்று அவர் கூறுகிறார். அவர்களில் பலருக்கும், பெருமைக்குரிய இறுதிப் பரிசு டைரனோசொரஸ் ரெக்ஸ் டைனோசர் தான்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த டைனோசரைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை; கிங் காங் மற்றும் ஜுராசிக் பார்க் போன்ற திரைப்படங்களில் தோன்றியதன் மூலமும், ஒரு ஆங்கில ராக் இசைக்குழுவின் பெயராகவும் இது நமது கலாசாரத்தில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளது.

புதைபடிவங்களைத் தேடுபவர்கள் தங்களின் கூடாரங்கள் மற்றும் உணவுகளை முதுகுப்பைகளில் சுமந்துகொண்டு, பல மாதங்கள் களத்தில் செலவிடுகிறார்கள்; நச்சுப்பாம்புகள், பூச்சிகள் மற்றும் மலை சிங்கங்கள் வாழும் யாருமற்ற வெட்டவெளியின் நடுவே முகாம்களை அமைத்துத் தங்குகிறார்கள்" என்று அவர் விளக்குகிறார்.

தெற்கு டகோட்டா 'பேட்லண்ட்ஸ்' பகுதியில்தான், பூமியில் வாழ்ந்து மறைந்த 67 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு 'கஸ்' கண்டெடுக்கப்பட்டது.

ஆனால், அதைக் கண்டுபிடிப்பது என்பது ஆரம்பக்கட்ட வேலை மட்டும்தான்" என்று கடந்த 20 ஆண்டுகளாக புதைபடிவங்களைச் சேகரித்துப் பாதுகாத்து வரும் சுயாதீன தொல்லுயிரியலாளர் டாக்டர் ஃபியான் ஸ்மித்விக் விளக்குகிறார்.

"திடீரென்று அவை மண்ணிலிருந்து வெளியே எடுக்கப்படும்போது, ​​அவற்றின் சுற்றுச்சூழல் சமநிலை மாறுகிறது; இதனால் அவை சிதையவோ அல்லது உடைந்து போகவோ தொடங்குகின்றன."

தாமஸ் ஹெய்ட்காம்ப் மற்றும் 'கஸ்'ஸைக் கண்டுபிடித்த குழுவினர், மிகவும் கவனமாக அகழாய்வு செய்து இந்த டைனோசரை கண்டுபிடித்தனர். டைனோசர் மண்ணில் புதைந்திருந்த நிலத்தின் உரிமையாளரும் கால்நடை வளர்ப்பாளருமான மறைந்த கேரி "கஸ்" லிக்கிங் என்பவரின் பெயர் டைனோசருக்கு சூட்டப்பட்டது.

"ஆனால், இது ஆண்டு முழுவதும் செய்யக்கூடிய வேலையல்ல" என்று கேஸாண்ட்ரா ஹாட்டன் விளக்குகிறார். "அகழாய்வுக்கு ஏற்ற பருவத்தில் மட்டுமே தோண்ட முடியும். நிலத்தடி பனி உருகும் வரை காத்திருக்க வேண்டும். பின்னர், நிலம் மீண்டும் உறைவதற்குள் மிக வேகமாகத் தோண்ட வேண்டும்."

கடந்த 2023 ஆம் ஆண்டில் அகழாய்வுப் பணிகள் முடிவடைந்த வேளையில், அக்குழுவினர் தங்களது மீட்புப் பணியின் முதற்கட்டத்தை மட்டுமே கடந்திருந்தனர். தொடர்ந்து, ஆய்வகச் சூழலில் அந்த டி-ரெக்ஸ் டைனோசரின் எலும்புக்கூட்டை ஆவணப்படுத்துவதிலும், அதனை மீண்டும் முழுமையான வடிவில் புனரமைப்பதிலும் மேலும் மூன்று ஆண்டுகள் கழிந்தன.

செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் ஏலம், சம்பந்தப்பட்ட குழுவினருக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைக்கவிருக்கும் ஒரு பெரும் வருவாயாக அமையவுள்ளது; இதுவே இதுவரை நடந்தவற்றில் மிகப்பெரிய ஏலமாகவும் இருக்கக்கூடும்.

இவற்றுள் 'கஸ்' என்ற டைனோசர் புதைபடிவம், ஏலத்திற்கு முந்தைய மதிப்பீட்டில் 30 மில்லியன் டாலர் என்ற மிக உயர்ந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டைனோசர் ஏலத்தைப் பொறுத்தவரை, 'அபெக்ஸ்' என்ற ஸ்டெகோசொரஸ் படிமம் 2024-ல் சோத்பிஸ் நிறுவனத்தால் 44.6 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டதே தற்போதைய சாதனமாக உள்ளது; ஆனால், ஏலத்திற்கு முன் மதிப்பிடப்பட்ட விலையை விட இது 11 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்களின் ஆரம்ப ஏலத் தொகை 19 மில்லியன் டாலருக்கும் அதிகமாகவே இருக்கும். புதைபடிவங்களைக் கையாளும் உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய அருங்காட்சியகங்களால் கூட, இவ்வளவு பெரியத் தொகையைச் செலவிடுவது சாத்தியமற்றதாகவே உள்ளது.

"ஏற்கனவே நூற்றுக்கணக்கான புதைபடிவ படிமங்களை வாங்குவதற்கான விலையைக் கொடுக்க முடியாத நிலை உள்ளது" என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் டைனோசர் ஆராய்ச்சியாளரான பேராசிரியர் சுசன்னா மெய்ட்மென்ட் விளக்கமாக சொல்லுகிறார்.

ஏலத்தில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த ஐந்து டைனோசர்களும் 2020-ஆம் ஆண்டிற்குப் பிறகு விற்கப்பட்டவை ஆகும். இதில் 2020-இல் 31.8 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்ட 'ஸ்டான்' என்ற டி. ரெக்ஸ் டைனோசரும் அடங்கும். இதன் ஆரம்ப விலை வெறும் 6 முதல் 8 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.

இது "உண்மையிலேயே ஒரு சிக்கலான விஷயம்" என்று அவர் கூறுகிறார்.

"உண்மையான புதைபடிவத்திற்கு மாற்று எதுவுமே இல்லை. நாம் ஏதேனும் ஓர் ஆய்வைச் செய்யப் போகிறோம் என்றால், அதன் உடலமைப்பைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் முதன்மையான விஷயம். அதில் எது உண்மையானது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று பேராசிரியர் மெய்ட்மென்ட் விளக்குகிறார்.

பூமியின் கடந்தகால உயிரினங்களைப் பற்றிய படிப்பான 'பலியோபயாலஜி' (தொல்லுயிரியல்) இப்போது இருப்பதை விட வேறு எப்போதும் இவ்வளவு முக்கியமானதாக இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.

"நாம் இப்போது அநேகமாக உயிரின அழிவு நிகழ்ந்துகொண்டிருக்கும் பேரழிவு காலகட்டத்தில் இருக்கிறோம்; நமது சுற்றுச்சூழலை மிகமிக வேகமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். தற்போதும் எதிர்காலத்திலும் என்ன நடக்கிறது என்பதை நமக்குத் தெரிவிக்கும் ஒரே வகையான அனுபவப்பூர்வமான தரவுகள் கடந்த காலம் மட்டுமே" என்று அவர் கூறுகிறார்.

இது விஞ்ஞானிகள் மீதான தாக்கம் மட்டுமே. ஆனால் பொதுமக்களைப் பொறுத்தவரை, அருங்காட்சியகத்தில் டைனோசரின் உண்மையான எலும்புகளைப் பார்ப்பது "அவர்களை இயற்கை உலகத்துடன் ஒன்றிணைக்க உதவுகிறது" என்று பேராசிரியர் மெய்ட்மென்ட் கூறுகிறார்.

டைனோசர் புதைபடிவங்கள் இப்போது அறிவியல் கண்ணோட்டத்தோடு பார்க்கப்படுவதில்லை என்று கூறும் அவர், மாறாக அவை செல்வந்தர்களால் சேகரிக்கப்படும் "கலைப்பொருட்களைப் போல" கருதப்படுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்கிறார்.

'கடிபட்டதற்கான பெரிய தழும்பு மண்டையோட்டில் காணப்படுகிறது'

'கஸ்' என்றழைக்கப்படும் இந்த புதைபடிவத்தின் விலை, அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாதிரி என்பதையே பிரதிபலிக்கிறது என்று கசாண்ட்ரா ஹாட்டன் சுட்டிக்காட்டுகிறார். "இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான 'டி. ரெக்ஸ்' படிவங்களில் 'கஸ்' ஒன்றாகும்; இதன் 61% எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக, ஒரு முழு எலும்புக்கூட்டில் பாதியைக் கண்டறிவதே ஒரு முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.

எலும்புகளின் நிலை, இந்த உயிரினம் வாழ்ந்த விதம் குறித்த ஆழமான தகவல்களையும் வழங்குகிறது.

"இதன் மண்டையோட்டின் மேற்பகுதியில் கடிபட்டதற்கான பெரிய தழும்பு ஒன்று உள்ளது; இது ஒரு சண்டையின்போது ஏற்பட்டிருக்கலாம். இதில் உடைந்த எலும்புகளும் உள்ளன; சில விலா எலும்புகள் உடைந்த இடங்கள் காலப்போக்கில் ஆறியபோது பெரிய திட்டுக்களாக மாறியிருப்பதைக் காண முடிகிறது."

ஏலத்தில் பங்கேற்குமாறு உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்களை பல மாதங்களாகத் தொடர்பு கொண்டு வருவதாக கசாண்ட்ரா ஹாட்டன் கூறுகிறார். "அறிவியல்பூர்வமாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று பொது மக்களின் பார்வைக்குக் கிடைக்க வேண்டும்" என அவர் விரும்புகிறார்.

ஆனால் டைனோசர்களை மீட்டெடுப்பதில் உள்ள நேரம், திறன், செலவு மற்றும் அபாயங்களை இந்த விலை பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் கூறினார். "அகழாய்வில் ஈடுபடுபவர்களில் பலர் மிகவும் சிரமமான பொருளாதார நிலையில் வாழ்பவர்கள்; அவர்கள் செல்வந்தர்கள் அல்ல. அவர்கள் தங்கள் சொந்தப் பணத்தையே முதலீடு செய்ய வேண்டியுள்ளது. இவற்றைத் தோண்டி எடுப்பது செல்வந்தர்கள் அல்ல."

ஆனால், இவற்றை வாங்குவது என்னவோ கோடீஸ்வரர்கள் தான்.

'அபெக்ஸ்' என பெயரிடப்பட்ட ஸ்டெகோசரஸ் டைனோசரை, 'சிட்டாடல்' என்ற ஹெட்ஜ் ஃபண்டின் நிறுவனரும் சிஇஓ-வுமான கென்னத் கிரிஃபின் ஏலத்தில் வாங்கினார். அதை அவர், அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு கடனாக வழங்கினார்.

Get More Updates

To learn more about the latest developments in Research & Discoveries, stay updated with our exclusive reports and analyses on AiLensNews.

Related News