சுறாக்கள் பற்றிய சுவாரஸ்யமான 9 தகவல்கள்

ALN NEWS DESK
ALN NEWS DESK
Updated : Jul 16, 2026, 08:25 AM IST
4 min read
  • linkedin
  • twitter
  • facebook
  • instagram
  • whatsapp

சுறாக்கள், மனிதர்களுடன் பல பொதுவான அம்சங்களைப் பகிர்ந்துகொள்கின்றன. இங்கு சுறாக்களின் கணித திறன், இசை ரசிக்கும் தன்மை மற்றும் பிற சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.

பலரும் நினைப்பதைவிட, சுறாக்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே பல பொதுவான அம்சங்கள் உள்ளன.

இன்று பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் முதுகெலும்புள்ள வேட்டையாடி உயிரினங்களில் மிகவும் பழமையானவற்றில் சுறாக்களும் அடங்கும்.

அத்தகைய வியத்தகு உயிரினம் நம்மை விழிவிரிய வைக்கும் சுவாரஸ்யமான 9 தகவல்களை இங்கே பார்ப்போம்.

1. அனைத்துமே அழிந்தாலும், பூமியில் சுறாக்கள் பிழைத்திருக்கும்

பூமியில் நிகழ்ந்த ஐந்து முக்கியப் பேரழிவுக் காலங்களையும் சுறாக்களோ அல்லது அவற்றின் நெருங்கிய மூதாதைகளோ கடந்து பிழைத்திருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அவற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று 'பெர்மியன்-ட்ரையாசிக் பேரழிவு'. இது பெரும்பாலும் 'பெரும் பேரழிவு' (Great Extinction) என்று அழைக்கப்படுகிறது.

இது பூமியின் காலநிலையில் ஏற்பட்ட, இயற்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய, மிகவும் அழிவுகரமான பேரழிவு நிகழ்வு. புவி மீது வாழ்ந்த பெரும்பாலான உயிரினங்கள் அழிய வித்திட்ட இந்தப் பேரழிவில், சுமார் 90% கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிட்டன.

இத்தகைய பேரழிவுகரமான நிகழ்விலும்கூட தப்பிப் பிழைத்து, சுறாக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன.

இன்று, பல மில்லியன் ஆண்டுகால பரிணாம வளர்ச்சிக்குப் பிறகு, உலகின் பெருங்கடல்கள் அனைத்திலும் சுறாக்க சுறாக்கள் காணப்படுகின்றன.

2. சுறாக்களுக்கு கணிதம் தெரியும்

சுறாக்கள், வெறும் உள்ளுணர்வின் அடிப்படையில் செயல்படும், வேட்டையாடி உண்ணும் தீவிர வேட்கையை மட்டுமே கொண்ட சராசரி உயிரினம் என்று பலர் நினைக்கிறார்கள்.

இருப்பினும், இந்தப் பொதுவான கருத்து முற்றிலுமாக உண்மையில்லை என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுறாக்கள் புத்திசாலித்தனமான உயிரினங்கள் என்றும், அவற்றால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆய்வுகள் காட்டுகின்றன.

ஒன்றுபோல இருக்கும், மிகவும் ஒத்த ஒலிகளுக்கு இடையிலான வேறுபாட்டை சுறாக்களால் அறிய முடியுமென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், பல்வேறு நுட்பமான அமைப்புகள் மற்றும் வண்ணமயமான வடிவியல் அம்சங்களை அவற்றால் அடையாளம் காண முடியும்.

நன்கு அறியப்பட்ட ஓர் அறிவியல் பரிசோதனையில், இளம் சாம்பல் நிற மூங்கில் சுறாக்களால் (gray bamboo sharks), வடிவங்கள் மற்றும் ஒளியியல் மாயத் தோற்றங்கள் தொடர்பான தகவல்களை ஏறக்குறைய ஓராண்டுக் காலம் வரை நினைவில் வைத்திருக்க முடிந்தது கண்டறியப்பட்டது.

சுறாக்களால் எளிய கணிதச் செயல்பாடுகளைக்கூட செய்ய முடியும் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, மூன்று மற்றும் ஐந்து, அல்லது நான்கு மற்றும் ஏழு என்ற கணக்கில் பொருட்கள் இருந்தால், அவற்றுக்கு இடையிலான எண்ணிக்கை வேறுபாட்டை அவற்றால் அறிய முடியும்.

ஆனால், நான்கு மற்றும் ஐந்து, போன்ற மிக நெருக்கமான எண்களுக்கு இடையிலான வேறுபாட்டை அறிந்துகொள்வது சுறாக்களுக்கு மிகவும் கடினமாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

3. சுறாக்களுக்கு ஜாஸ் இசை பிடிக்கும்

மற்றோர் அறிவியல் ஆய்வில், ஆஸ்திரேலியாவை சேர்ந்ததும் பொதுவாகக் கடல் தரையில் வாழக் கூடியதுமான போர்ட் ஜாக்சன் சுறாக்களின் கற்றல் திறன் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

அந்த சுறாக்களுக்கு ஓர் எளிய பணி வழங்கப்பட்டது. எப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட வகை இசை ஒலிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அவை தமது தொட்டிக்குள் இருக்கும் குறிப்பிட்ட ஓரிடத்துக்கு நீந்திச் செல்ல வேண்டும். சரியான இடத்தை அடைந்தால், அவற்றுக்கு வெகுமதியாக உணவு அளிக்கப்பட்டது.

சிட்னியில் அமைந்துள்ள மெக்குவாரி பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில், ஜாஸ் இசையைத் தங்களுக்கு உணவு கிடைக்கும் இடத்துடன் தொடர்புபடுத்திச் செயல்படுவதற்கு அந்த சுறாக்கள் வெற்றிகரமாகக் கற்றுக் கொண்டதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அந்த சுறாக்கள், ஜாஸ் இசை ஒலிபரப்பப்பட்ட நேரங்களில், அவை உணவு வழங்கப்படும் பகுதிக்கு நீந்திச் செல்வதை விரும்பின. ஆனால், கிளாசிக்கல் இசை ஒலிபரப்பு செய்யப்பட்டபோது அவற்றால் அத்தகைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஆய்வாளர் குலம் பிரவுன், இந்த ஆய்வின் முடிவுகள் குறித்தான செய்தியறிக்கையில் விளக்கியுள்ளார்.

அதில் அவர், "கிளாசிக்கல் இசை ஒலிக்கும்போது தாங்கள் ஏதோவொன்றைச் செய்ய வேண்டும் என்பது அந்த சுறாக்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆனால், தாங்கள் வேறோர் இடத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை அவற்றால் புரிந்துகொள்ள முடியவில்லை," என்று குறிப்பிட்டார்.

4. சுறா உடலில் தொப்புள் இருக்கும்

சில வகை சுறாக்கள் முட்டையிட்டாலும், பல சுறா இனங்கள் மனிதர்களைப் போலவே குட்டிகளை நேரடியாகப் பெற்றெடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.

புல் சுறாக்கள் (bull sharks), சுத்தியல் தலை சுறாக்கள் (hammerhead sharks) போன்ற இனங்களில், குட்டிகள் தாயின் கருப்பையிலேயே வளர்கின்றன. மனித குழந்தைகள் பிறப்பதற்கு முன் தாயிடம் இருந்து தொப்புள் கொடி வழியாக ஊட்டச்சத்துகளைப் பெறுவதைப் போலவே, இந்த சுறாக் குட்டிகளும் ஊட்டச்சத்துகளைப் பெறுகின்றன.

இதன் காரணமாக, பிறந்த பிறகு தொப்புள் கொடி இருந்த தழும்பு ஆறும் வரை, பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு இந்தக் குட்டிகளுக்குத் தொப்புள் அடையாளம் காணப்படுகிறது.

வேறு சில சுறா இனங்கள் மாறுபட்ட முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை உடலுக்கு வெளியே முட்டையிடுவதில்லை; அதேநேரம் இவற்றின் குட்டிகள் பாலூட்டிகளைப் போலவும் முழுமையாக வளர்வதில்லை. அதற்குப் பதிலாக, தாயின் உடலுக்கு உள்ளேயே இருக்கும் முட்டைகளுக்குள் கருக்கள் வளர்கின்றன. குட்டிகள் வெளியே வருவதற்கு முன்பே இந்த முட்டைகள் பொரிக்கின்றன.

இதன் விளைவாக, தாயின் உடலில் முட்டைகளின் உள்ளே பிறந்திருந்தாலும், அவை குட்டிகளாகவே பிறக்கின்றன.

இந்த வகையில் இனப்பெருக்கம் செய்யும் சுறாக்களுக்கு உதாரணமாக, ஸ்பைனி சுறாக்களை (spiny sharks) குறிப்பிடலாம். இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் நீண்டதாக இருக்கும், குட்டிகள் பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகள்கூட ஆகக்கூடும்.

5. கருவிலேயே உடன்பிறப்புகளை சாப்பிட்டுவிடும் சுறாக் குட்டிகள்

சாண்ட் டைகர் சுறாக்களுக்கு (Sand tiger sharks) உயிர் பிழைத்திருப்பதற்கான போராட்டம் அவை பிறப்பதற்கும் முன்பே தொடங்கி விடுகிறது.

பெண் சாண்ட் டைகர் சுறாக்களின் உடலில் இரண்டு கருப்பைகள் உள்ளன. ஒவ்வொரு கருப்பையிலும் ஐந்து குட்டிகள் வரை வளரக்கூடும். ஆயினும், இந்தக் குட்டிகள் அனைத்துமே உயிர் பிழைப்பதில்லை.

தாயின் உடலுக்குள் கருக்கள் வளரும்போதே தங்களுடன் கருப்பையில் வளரும் பிற குட்டிகளை உண்ணத் தொடங்குகின்றன. இதன் காரணமாக, வழக்கமாக ஒவ்வொரு கருப்பையிலும் இருந்து ஒரேயொரு குட்டி மட்டுமே பிழைத்திருந்து பிறக்கிறது.

இந்த விசித்திரமான நடத்தை 'கருப்பைக்குள் நடக்கும் சுய-இன உண்ணல்' (intrauterine cannibalism) என்று அழைக்கப்படுகிறது. இது அடெல்ஃபோபேகி (adelphophagy) என்றும் அறியப்படுகிறது. இதற்கு 'தன் உடன்பிறப்பை உண்ணுதல்' என்று பொருள்.

இப்படியாக, பிற குட்டிகளை உண்டு உயிர் பிழைத்திருக்கும் குட்டிகளுக்கு, இதன்மூலம் நன்மையும் கிடைக்கிறது.

கருப்பைகளில் குட்டிகளின் எண்ணிக்கை குறையும்போது, தாய் சுறா தொடர்ந்து கருவுறாத முட்டைகளை உற்பத்தி செய்கிறது. அவை எஞ்சியுள்ள குட்டிகளுக்குத் தொடர்ச்சியான உணவு மூலமாக அமைகின்றன.

இந்தக் கூடுதல் ஊட்டச்சத்து, கருவில் பிழைத்திருக்கும் சுறாக் குட்டி பிறக்கும் முன்பே அளவில் பெரியதாகவும், வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வளர உதவுகிறது.

6. இணைபிரியா நண்பர்களைக் கொண்டிருக்கும் சுறாக்கள்

சுறாக்கள் எப்போதும் தனியாகவே வாழ்ந்து வேட்டையாடுபவை எனப் பலரும் கருதுகின்றனர். ஆனால், அனைத்து வகையான சுறாக்களுக்கும் இதே வாழ்வியல் முறை பொருந்தாது என்பதை அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன.

சாம்பல் நிற ரீஃப் சுறாக்களை (grey reef sharks) இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவை குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரே சுறா குழுவுடன் இணைந்திருக்கவே விரும்புகின்றன.

அதற்குப் பிறகு, அவை பொதுவாகச் சிறிய குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு திசைகளில் செல்கின்றன. அப்படியிருந்தும், ஆண்டின் வெவ்வேறு காலகட்டங்களில் அவை மீண்டும் ஒன்றையொன்று சந்திக்கின்றன.

Get More Updates

To learn more about the latest developments in Community Stories, stay updated with our exclusive reports and analyses on AiLensNews.

Related News