மேகமலை கிராமங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்ற உத்தி: கிராம மக்களின் கவலை

ALN NEWS DESK
ALN NEWS DESK
Updated : Jul 19, 2026, 08:40 AM IST
5 min read
  • linkedin
  • twitter
  • facebook
  • instagram
  • whatsapp

மேகமலை கிராமங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், உச்ச நீதிமன்றத்தின் உத்தியால் வெளியேற்றப்படுவதற்கான ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்கிறார்கள்.

"எனக்கு 85 வயதாகிறது. என் வீட்டிற்கு பட்டா கிடையாது. ஆனால், நான் பிறந்தது இங்கு தான். இந்த வயதில் ஊரைக் காலி செய்யுங்கள் என்றால் நான் எங்கே செல்ல முடியும். உயிரே போனாலும், இங்கிருந்து போக முடியாது" எனக் கூறுகிறார் வண்டியூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியம்.

தேனி மாவட்டத்தின் கடமலைகுண்டு–மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் வண்டியூர் உள்பட 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராம மக்கள் பல தலைமுறைகளாக இங்கு வசித்து வருவதாகக் கூறுகின்றனர். இலவம் பஞ்சு, முந்திரி மற்றும் காய்கறிகள் பயிரிடுவது என விவசாயமே இவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

இப்பகுதி 2021ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலைப் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் ஐந்தாவது புலிகள் காப்பகமாகும். இந்தப் புலிகள் காப்பகத்தை உருவாக்குவதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூர் அணில்கள் சரணாலயம் மற்றும் மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 1,01,657.13 ஹெக்டேர் நிலம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புலிகள் காப்பகம் விருதுநகர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பரவியுள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள கண்டமனூா், வருசநாடு, மயிலாடும்பாறை, மேகமலை, சின்னமனூா், ஆகிய வனசரகங்களுக்கு உட்பட்ட சுமாா் 5,000 ஹெக்டேர் பரப்பளவு மலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையின் அனுமதியின்றி அங்கு சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் செயல்படுவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் மே 29, 2026 அன்று அளித்த உத்தரவு தான் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் கவலைக்கு காரணம்.

"தேனி மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, மாவட்டம் முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மொத்தம் 4,601 ஆக்கிரமிப்பாளர்கள் 5,072.653 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். இது தொடர்பான அறிக்கை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், "இங்கு ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடப்படுவது மேகமலையில் சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் நடத்துபவர்கள் மட்டுமல்ல, கிராம மக்களையும் தான். பல தலைமுறைகளாக வாழ்பவர்களை எப்படி திடீரென வெளியேற்ற முடியும்?" என கேள்வி எழுப்புகிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன்.

தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பிரமாணப் பத்திரத்தில், "ஆக்கிரமிப்பாளர்களில் பலர் நிலமற்ற மற்றும் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினர் ஆவர்" எனக் குறிப்பிட்டுள்ளது.

"மேகமலை என்றதும் அதை சுற்றுலா தலம் அல்லது தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதி என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக எல்லைக்குள் பல்வேறு கிராமங்கள் உள்ளன. அவை சுற்றுலா தலங்கள் அல்ல, தமிழ்நாட்டின் சராசரி கிராமங்கள் தான். அங்கு பல்லாயிரம் மக்கள் பல ஆண்டுகளாக வசிக்கிறார்கள்" என்கிறார் கண்ணன்.

உத்தரவின் பின்னணி என்ன?

உச்ச நீதிமன்றம் மார்ச் 2025இல், "புலிகள் காப்பகம், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க, அகஸ்தியமலை நிலப்பரப்பு முழுவதும் விரிவான ஆய்வு ஒன்றை மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழு (சிஇசி) நடத்த வேண்டும்" என உத்தரவிட்டது.

அந்தக் குழு ஜூலை 2025 மற்றும் ஜனவரி 2026 ஆகிய மாதங்களில் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது.

அதன்படி, அகஸ்தியமலை சூழலியல் நிலப்பரப்பு என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களையும், கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியது.

கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் பெரியார் புலிகள் காப்பகம் உள்ளிட்ட முக்கிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் இதில் அடங்கும்.

'ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் 4,601 ஆக்கிரமிப்பாளர்கள் 5,072.653 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். வனப்பகுதி சார்ந்த மலைச் சரிவுகளில் இலவம் பஞ்சு, ஏலக்காய், எலுமிச்சைப்புல், முந்திரி, அவரை மற்றும் பிற மரப்பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம், 1955-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டமும் தீவிரமாக மீறப்பட்டுள்ளது' என சிஇசி அறிக்கை தெரிவித்தது.

"ஆக்கிரமிப்பாளர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளவர்களில், 118 தனி நபர்கள், ராணுவம், காவல்துறை, சி.ஆர்.பி.எஃப், வனத்துறை, வருவாய்த்துறை, மின்சார வாரியம், அங்கன்வாடி, பள்ளிக் கல்வித்துறை, ஊராட்சிகள், நில அளவைத் துறை மற்றும் பிற சேவைகளைச் சேர்ந்த பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்" என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் பகுதியின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான செயல் திட்டம் 2022இல் தயாரிக்கப்பட்ட போதிலும், அதனைச் செயல்படுத்துவதில் மந்தநிலை காணப்படுகிறது. மாநில அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை' என அறிக்கை குறிப்பிடுகிறது.

மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதில் அடங்கியுள்ள கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக தனது பதிலை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு கூறியது என்ன?

அதற்கு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பதில் பிரமாணப் பத்திரத்தில், "ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் காண்பதற்காக டிரோன் மூலமாக ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து கள எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை வரையறை செய்யப்படும், அதன் பின்னரே ஒரு விரிவான வெளியேற்றும் திட்டத்தை இறுதி செய்ய முடியும்." எனக் குறிப்பிட்டுள்ளது.

"ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு வசதிகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. பள்ளிகள், அங்கன்வாடிகள் மற்றும் பொது விநியோகத் திட்ட வசதிகள் போன்ற சேவைகள் விரிவாக்கப்படவில்லை, புதிய கட்டடங்களுக்கோ அல்லது புனரமைப்புகளுக்கோ ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ரேஷன் விநியோகம் ஒரு பொதுவான இடத்தில் வாரத்திற்கு ஒரு முறை என குறைக்கப்பட்டுள்ளது".

"மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு செயல் திட்டம்" ஒன்று வகுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, அதன் மூலம் மக்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது.

  • நிரந்தர வீடு மற்றும் காட்டின் மூலம் வாழ்வாதாரம்- 1595 பேர், 1679.733 ஹெக்டேர் நிலம்.
  • தற்காலிக வீடு மற்றும் காட்டில் வாழ்வாதாரம்- 233 பேர், 525.204 ஹெக்டேர் நிலம்.
  • காட்டில் விவசாயம் மட்டும்- 2773 பேர், 2867.706 ஹெக்டேர் நிலம்.

இதில் முதலாம் வகையின் கீழ் வருபவர்கள் வனப்பகுதிக்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டு, அரசால் வழங்கப்படும் ஆயத்த குடியிருப்புகளில் குடியமர்த்தப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

'ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவப் படை'

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த மே 29, 2026 அன்று வெளியிட்ட உத்தரவில், "அகத்தியமலை நிலப்பரப்பு புலிகள், யானைகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்கள் வாழும் மிக முக்கியமான பல்லுயிர் மையமாகும். ஆனால், இங்குள்ள ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத மேய்ச்சல் மற்றும் கஞ்சா சாகுபடி போன்ற அச்சுறுத்தல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது. மேலும்,

  • காடுகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும், அவர்களை வெளியேற்றுவதும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். மனிதாபிமானக் காரணங்களைக் காட்டி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை காலவரையின்றி தாமதப்படுத்தக் கூடாது.
  • ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான தெளிவான, காலக்கெடுவுடன் கூடிய திட்டத்தை ஒரு மாதத்திற்குள் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் (சிஇசி) அரசு சமர்ப்பிக்க வேண்டும்.
  • வனப்பகுதியை ஆக்கிரமித்ததாகக் கண்டறியப்பட்ட 118 அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களிடம் சூழலியல் மறுசீரமைப்புக்கான அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.
  • வனப்பகுதிகளுக்குள் அமைந்துள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள், வசதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத உட்கட்டமைப்புகள் வன நிலத்திலிருந்து ஆறு மாத காலத்திற்குள் நிறுத்தப்பட்டு பிரிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டும்.
  • ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதிகளில் மின்சாரம், சாலை வசதி, போக்குவரத்து மற்றும் பிற அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றப்படும் வரை, வனப்பகுதியில் எந்தவொரு புதிய வணிக அல்லது வனம் சாராத திட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது.
  • இந்த உத்தரவுகளை மாநில அரசு நிறைவேற்றத் தவறினால், ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை ராணுவப் படையை ஈடுபடுத்த சிஇசி பரிந்துரைக்கலாம்.

ஆகஸ்ட் 28, 2026-க்குள் சிஇசி தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 1, 2026 அன்று நடைபெறும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலை கிராம மக்கள் கூறுவது என்ன?

"இங்கு சிலர் தங்கள் வீடுகள் மற்றும் நிலங்களுக்கு பட்டா வைத்துள்ளார்கள். சிலரிடம் இல்லை. அருகருகே இருக்கும் நிலங்களில் கூட பட்டா வேறுபாடு உள்ளது. எனவே இன்று பட்டா இல்லாதவர்களை வெளியேற்றினால், நாளை பட்டா இருப்பவர்களையும் வெளியேற்றுவார்கள்" என்கிறார் வாலிப்பாறை மலைக் கிராமத்தைச் சேர்ந்த மருது பாண்டி.

Get More Updates

To learn more about the latest developments in Local & Regional, stay updated with our exclusive reports and analyses on AiLensNews.

Related News