1983-ஆம் ஆண்டு ஷெர்கார் என்ற புகழ்பெற்ற குதிரை, அயர்லாந்தில் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டது. இதற்கான காரணங்கள் மற்றும் விசாரணை குறித்து விவரிக்கப்படுகிறது.
நியூ டெல்லி, இந்தியா 21 ஜூலை, 2026 ALN: உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்புமிக்க ஆண் குதிரையாக ஷெர்கார் திகழ்ந்தது.
1983-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ஆம் தேதி அன்று, அயர்லாந்தின் குதிரை வளர்ப்புப் பண்ணையிலிருந்து ஆயுதம் ஏந்திய நபர்கள் அந்தக் குதிரையைக் கடத்திச் சென்றபோது, பிபிசி ஒரு பரபரப்பான குற்றச் சம்பவத்தைப் பற்றி செய்தி வெளியிட்டது.
ஒரு குளிர்கால இரவில் ஷெர்கார் என்ற அந்தப் பரிசு பெற்ற ஆண் குதிரை, அயர்லாந்தில் உள்ள ஒரு குதிரை வளர்ப்புப் பண்ணையிலிருந்து திருடப்பட்டது.
"குதிரைப் பந்தய உலகில் அவ்வப்போது ஊக்கமருந்து அல்லது போட்டி முறைகேடு போன்ற சர்ச்சைகள் ஏற்படுவது புதிதல்ல. ஆனால், இது முற்றிலும் வேறுபட்ட சம்பவம்" என்று கூறிய பிபிசியின் நிக்கோலஸ் விட்செல், "ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று குதிரையை கடத்தி சென்றது " என்றார்.
அப்போது, விளையாட்டு உலகில் அபார சாதனைகளை நிகழ்த்தியிருந்த ஷெர்கார், இனப்பெருக்கக் குதிரையாக தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருந்தது.
ஓர் ஆண் குதிரை எவ்வளவு அதிக வெற்றிகளைப் பெற்றிருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் இனப்பெருக்கச் சேவைக்கான விலையும் அதிகமாக இருக்கும்.
1981-ஆம் ஆண்டின் எப்சம் டெர்பி போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக ஷெர்காருக்கான தேவை அதிகமாக இருந்தது.
அப்போட்டியின் 246 ஆண்டுகால வரலாற்றில், மிகச்சிறந்த தருணங்களில் ஒன்றாக அது இன்றும் கருதப்படுகிறது.
ஐரிஷ் டெர்பி மற்றும் கிங் ஜார்ஜ் VI சேஸ் ஆகிய போட்டிகளில் அடுத்தடுத்து பெற்ற வெற்றிகள், ஷெர்காரின் உலகளாவிய பந்தய சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்தின.
அந்த அற்புதமான பந்தயப் பருவத்திற்குப் பிறகு, ஷெர்கர் இனப்பெருக்கக் குதிரையாக தனது புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக அயர்லாந்து அனுப்பப்பட்டது.
வேகமாக வளர்ந்து கொண்டிருந்த அயர்லாந்தின் உயர்தர குதிரை வளர்ப்புத் துறைக்கு இது ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது.
உலகின் மிக உயர்ந்த மதிப்புடைய இனப்பெருக்கக் குதிரையாக இருந்த ஷெர்கர், 1982-ஆம் ஆண்டில் 44 பெண் குதிரைகளுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டது. ஒவ்வொரு முறைக்கும் 80,000 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.
1983-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அயர்லாந்தின் கில்டேர் கவுண்டியில் உள்ள ஆகா கானின் பாலிமேனி ஸ்டட் பண்ணையில் ஷெர்கரின் இரண்டாவது பருவத்திற்கான அனைத்து முன்பதிவுகளும் நிரம்பிவிட்டன
ஆனால், 1983 பிப்ரவரி 8-ஆம் தேதி, கைத்துப்பாக்கிகளுடன் வந்த முகமூடி அணிந்த கடத்தல்காரர்கள் அந்தப் பண்ணைக்குள் புகுந்தனர்.
இவ்வளவு மதிப்பு மிக்க சொத்தான அந்த குதிரைக்கு, மிகக் குறைவாகவே பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
தலைமைப் பராமரிப்பாளர் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்டின் குடும்பத்தினர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டனர், அதே நேரத்தில் ஷெர்காரை ஒரு டிரெய்லரில் ஏற்றுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது.
ஃபிட்ஸ்ஜெரால்டை தனியாக மற்றொரு வேனில் ஏற்றி, சில மணி நேரம் பல இடங்களுக்கு சுற்றிக்கொண்டு சென்றனர்.
சுமார் 40 மைல் தொலைவில் அவர் விடுவிக்கப்படுவதற்கு முன்பு, கடத்தல்காரர்கள் அவருக்கு "கிங் நெப்டியூன்" என்ற கடவுச்சொல்லைக் கொடுத்தனர்.
பின்னர் மீட்புத் தொகை கோரும் பேச்சுவார்த்தைகளில், தாங்களே உண்மையான கடத்தல்காரர்கள் என்பதை நிரூபிக்க அந்தக் கடவுச்சொல்லைப் பயன்படுத்துவதாக அவர்கள் கூறினர்.
மேலும், நடந்த சம்பவத்தை உடனடியாக யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று அவர்கள் அச்சுறுத்தியதால், அவர் பல மணி நேரம் கழித்தே தகவல் அளித்தார்
அதன் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தில், பல அவசர தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
விசித்திரமாக, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுவதற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பே, அயர்லாந்து அமைச்சரவையின் இரண்டு அமைச்சர்களுக்கு இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து தெரியவந்திருந்தது.
அதற்குள், ஆரம்பகட்டத்தில் ஏற்பட்ட முக்கியமான தாமதம் காரணமாக, கடத்தல்காரர்களின் தடயங்கள் மறைந்துவிட்டன.
இந்த விசாரணையின் பொதுமுகமாக காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் மர்ஃபி செயல்பட்டார்.
ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளிப்படையாகக் கூறிய ஒரு பதில் மிகவும் பிரபலமானது:
"தடயமா? அது எங்களிடம் இல்லாத ஒன்றுதான்."எனக் கூறினார்.
கடத்தலுக்கான காரணங்களைப் பற்றிய ஊகங்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தன.
பிபிசி பந்தயச் செய்தியாளர் ஜூலியன் வில்சன், 'ஸ்போர்ட்ஸ்நைட்' நிகழ்ச்சியின் டெஸ் லைனமிடம் இதுகுறித்து கூறுகையில், " குதிரையைத் திருடுபவர்கள் யாராக இருந்தாலும், ஷெர்காரை தங்கள் பெண் குதிரையுடன் இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். ஆனால் இப்போது குதிரைக் குட்டிகளை அடையாளம் காணும் முறையும், ரத்தப் பரிசோதனை முறையும் மிகவும் துல்லியமாக இருப்பதால், ஷெர்காரின் சட்டவிரோத குட்டிக் குதிரையை அயர்லாந்து குதிரைப் பந்தய உலகில் யாருக்கும் தெரியாமல் சேர்ப்பது மிகவும் கடினம் " என்றார்.
மற்றொரு நம்ப முடியாத வதந்தி என்னவென்றால், ஐ.ஆர்.ஏ அமைப்பிற்கு ஆயுதங்கள் பெறுவதற்கு, இந்தக் குதிரை அயர்லாந்திலிருந்து லிபியாவின் கர்னல் கடாஃபிக்குக் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
அந்தக் காலத்தில், நிதி நெருக்கடியில் இருந்த ஐ.ஆர்.ஏ, தனது ஆயுதப் போராட்டத்திற்கான நிதியை திரட்ட மனிதர்களைக் கடத்தி மீட்புத் தொகை வசூலித்த சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததால், முதன்மை சந்தேக நபர்களாகக் கருதப்பட்டது.
ஆனால் பின்னர், கடத்தலின் நோக்கம் வெறும் பணம் என்பதே தெரியவந்தது..
ஷெர்கர் கடத்தப்பட்டு 24 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில், கடத்தல்காரர்கள் 2 மில்லியன் பவுண்டுகள் (இன்றைய மதிப்பில் 7 மில்லியன் பவுண்டுகள்) மீட்புத் தொகையைக் கோரி, 'கிங் நெப்டியூன்' குறியீட்டைப் பயன்படுத்தி பாலிமேனி பண்ணையைத் தொடர்புகொண்டனர்.
பணத்தைக் கொடுக்க வேண்டுமா என்பதில் பங்குதாரர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது. அமெரிக்கப் பயிற்சியாளர் பிரையன் ஸ்வீனி பணத்தைக் கொடுப்பதற்கு ஆதரவாக இருந்தார்.
அதுகுறித்து அவர் பிபிசியிடம், "குழந்தையைக் பறிகொடுத்த ஒரு தாயிடம் மீட்புத் தொகை கொடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்று கேட்டால், ஆம், விரைவாகக் கொடுக்க வேண்டும் என்றுதான் பதில் வரும் என நினைக்கிறேன்" என்றார்.
ஆனால், புகழ்பெற்ற டெர்பி பந்தயத்திற்கு பெயர் தந்த ஆங்கில பிரபுவின் வாரிசான லார்டு டெர்பி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
"மீட்புத் தொகை வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் மேலும் பல குதிரைகள் கடத்தப்படும் அபாயம் உள்ளது. அதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது." என்றார்.
ஷெர்கர் கடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 130 மைல் வடக்கே உள்ள பெல்ஃபாஸ்டில் இருக்கும் பிபிசி செய்தியகத்திற்கு ஒரு மர்மத் தொலைபேசி அழைப்பு வந்தது.
அந்த அடையாளம் தெரியாத நபர், பிரிட்டனின் மூன்று பிரபல குதிரைப் பந்தய பத்திரிகையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
அடுத்த நாள் மாலைக்குள், அவர்கள் வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் உள்ள யூரோபா ஹோட்டலுக்கு வர வேண்டும் என்றும் கூறப்பட்டது. வட அயர்லாந்து மோதல்கள் காலத்தில், உலகிலேயே அதிக முறை குண்டுவெடிப்புக்கு இலக்கான ஹோட்டலாக யூரோபா ஹோட்டல் அறியப்பட்டது.
அங்கு சென்றவர்களில் ஒருவராக இருந்தவர் ஐடிவி குதிரைப் பந்தய நிகழ்ச்சி தொகுப்பாளர் டெரெக் தாம்சன்.
2013இல் பிபிசியின் 'விட்னஸ் ஹிஸ்டரி' நிகழ்ச்சியில் அவர், தங்களது வருகைக்குப் பிறகு உடனடியாக ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகக் கூறினார். அது கடத்தல்காரர்களிடம் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.
To learn more about the latest developments in Crime & Law, stay updated with our exclusive reports and analyses on AiLensNews.